இந்தியா, ஜப்பானை மிஞ்சிய நிலையில் உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளதாக நீதி ஆயோக் அமைப்பின் தலைவர் பி.வி.ஆர். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
“நான் பேசும் தருணத்தில் இந்தியா ஒரு 4 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார நாடாக உள்ளது. இந்தியா இன்று உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம். நாங்கள் மிகவும் சாதகமான புவியியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளில் உள்ளோம்,” என அவர் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்ட உலக பொருளாதார குறிகாட்டி (WEO) அறிக்கையின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 4.19 டிரில்லியன் டாலராக இருப்பதாகவும், இது ஜப்பானின் அளவைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி பொருளாதார நாடுகள்:
1. அமெரிக்கா
2. சீனா
3. ஜெர்மனி
4. இந்தியா
5. ஜப்பான்
“நாம் திட்டமிட்டபடி முன்னேறினால், அடுத்த 2.5 முதல் 3 ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்,” என சுப்ரமணியம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதிய IMF அறிக்கையின் படி, இந்தியாவின் தலா வருமானம் 2013-14 இல் 1,438 டொலரில் இருந்து 2025 இல் 2,880 டொலராக இருமடங்காக உயர்ந்துள்ளது.
2025-26ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.2% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது பழைய கணிப்பான 6.5% க்கும் கீழாகும். அதன் காரணமாக, உலகளாவிய வர்த்தக பதற்றம் மற்றும் நிச்சயமற்ற சூழ்நிலை காரணமாக வளர்ச்சி வீதம் குறைந்து இருக்கலாம் என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
நிதி ஆயோக் (NITI Aayog) அல்லது நீதி ஆயோக் என்பது இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு குழுவாகும். இதில் நிதி என்பது, (NITI – National Institution for Transforming India) ஆகும்.