ஹமாஸ் அமைப்புக்கெதிராக ஜேர்மனி அதிரடி நடவடிக்கை: மற்றொரு அமைப்பு மீதும் தடை

7 2

ஹமாஸ் அமைப்புக்கெதிராக ஜேர்மனி அதிரடி நடவடிக்கை: மற்றொரு அமைப்பு மீதும் தடை

ஜேர்மனியில் ஹமாஸ் அமைப்பின் மீது ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, அந்த அமைப்புக்கு ஆதரவு தெரிவிப்போர் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக ஜேர்மனி அரசு அறிவித்துள்ளது.

ஜேர்மனி, இஸ்லாமியவாத ஆயுதக்குழுவான ஹமாஸ் அமைப்பை ஏற்கனவே தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், பாலஸ்தீன கைதிகள் ஆதரவு அமைப்பு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் Samidoun என்னும் அமைப்பின் மீதும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு அமைப்புகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க அரசு திட்டமிட்டுவருவதாக ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் அறிவித்திருந்தார்.

ஹமாஸ் மற்றும் Samidoun அமைப்புகளின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதன் பொருள் என்னவென்றால், இந்த அமைப்புகளின் செயல்பாடுகளில் தொடர்ந்து தீவிரமாக பங்கேற்போர் இனி குற்றவாளிகளாக கருதப்படுவார்கள்.

இந்த அமைப்புகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அதிகாரிகள் அனுமதிக்கப்படுவார்கள். அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இணையத்தில் இருப்பதும் சமூக ஊடகங்க செயல்பாடுகளில் ஈடுபடுவதும் சட்டப்படி குற்றமாக கருதப்படும்.

இது குறித்து விளக்கமளித்த ஜேர்மன் உள்துறை அமைச்சரான Nancy Faeser, ஹமாஸ் அமைப்புடன், இன்று மற்றொரு அமைப்பின் மீதும் முழுமையாக தடை விதித்துள்ளேன். Samidoun என்னும் அந்த அமைப்பின் நோக்கம் இஸ்ரேலை அழிப்பதாகும்.

ஜேர்மனியில் ஹமாஸுக்கு ஆதரவளிக்கும் சுமார் 450 பேர் உள்ளதாக உளவுத்துறை கணக்கிட்டுள்ளது. அத்துடன், இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதும், ஜேர்மனியில் அதை சிலர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். அந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளது Samidoun என்னும் அமைப்பாகும். இந்த செயல்கள், அந்த அமைப்பு யூத வெறுப்பு மற்றும் மக்களை மனிதாபிமானமற்ற முறையில் பார்த்தல் ஆகிய மோசமான குணங்கள் கொண்டது என்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளது என்றார்.

ஜேர்மனியில் Samidoun அமைப்பின் கிளை முற்றிலும் கலைக்கப்படும் என்று கூறிய ஜேர்மன் உள்துறை அமைச்சரான Nancy Faeser, அதனால் ஜேர்மனியில் இத்தகைய செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.

Exit mobile version