பிரான்ஸ் அரசின் புதிய அறிவிப்பின்படி, வரவிருக்கும் 2026ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மில்லியன் கணக்கான வீடுகளுக்குச் சொத்து வரி (Property Tax) உயர்த்தப்பட உள்ளது. நகராட்சிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் கணக்கீட்டு முறையே இந்த உயர்வுக்குக் காரணம் என்று அந்நாட்டு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மாற்றத்தின் தாக்கம் நேரடியாகச் சுமார் 7.4 மில்லியன் வீட்டு உரிமையாளர்களைப் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், ஒவ்வொருவரும் சராசரியாக 63 யூரோ (Euro) வரை கூடுதலாகச் சொத்து வரி செலுத்த வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
புதிய வரி விதிப்பு முறையில், வீடுகளின் வசதிகள், அவை அமைந்துள்ள இடம் மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலை ஆகியவை முக்கியக் காரணிகளாகக் கருதப்படுகின்றன. இதனால் பல நகரங்களில் சொத்து வரி மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
முன்னதாக இரண்டாம் வீடுகளுக்கான taxe d’habitation (வீட்டு வரி) ஏற்கனவே உயர்த்தப்பட்டிருந்த நிலையில், இப்போது பொதுவான சொத்து வரியும் உயர்வதால் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர்கள் கூடுதல் சுமையை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
நகராட்சிகளின் நிதி வலிமையை மேம்படுத்தவும், அவசியமான பொதுச் சேவைகளுக்கான வருவாயை அதிகரிக்கவும் இந்த மாற்றம் தேவையானது என அரசு விளக்கமளித்துள்ளது.
இதேவேளை, இந்த அதிகரிப்பு, பிரான்சில் சொத்து வாங்க விரும்பும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என மதிப்பிடப்படுகிறது. ஏற்கனவே “French property traps” எனப்படும் சிக்கல்களைச் சந்தித்து வரும் முதலீட்டாளர்களுக்கு, புதிய வரி உயர்வு கூடுதல் சவாலாக அமையும் அபாயம் உள்ளது.
இதனால், 2026ஆம் ஆண்டில் பிரான்சில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் தவிர்க்க முடியாத வகையில் அதிக வரிச் சுமையை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.