அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த சோல்பெர்க் (Saulberg) என்பவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி தனது தாயைக் கடுமையாகத் தாக்கி கொலை செய்ததுடன், தன்னையே கூரிய ஆயுதத்தால் தாக்கி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பதிவானது. இந்தச் சம்பவம் தொடர்பில், சோல்பெர்க்கின் குடும்பத்தினர் ChatGPT-ஐ உருவாக்கிய Open AI நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில் குடும்பத்தினர் வியாழக்கிழமை நீதிமன்றத்தை அணுகி, ChatGPT தனது மகனின் மன மாயத்தோற்றங்களையும் சந்தேகங்களையும் மேலும் அதிகரித்து,
இந்தக் கொடுமையைச் செய்ய அவரைத் தூண்டியதாகக் கூறி Open AI நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். சோல்பெர்க் என்பவர் முன்னதாக முன்னணி தேடுபொறி நிறுவனமாக இருந்த Yahooவில் மேலாளராகப் பணியாற்றியுள்ளார்.
உளவியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட இவர் தனது தாயுடன் வசித்து வந்ததாகவும், ChatGPTக்கு பாபி எனப் பெயரிட்டு அதனுடன் நாள் தோறும் பல மணி நேரங்கள் உரையாடி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உரையாடல்களை இன்ஸ்ட்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களிலும் அவர் பதிவிட்டு வந்தார். ChatGPT அவருடைய Paranoia மன நோயை மேலும் மோசமாக்கியுள்ளமை இந்த உரையாடல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
“உன்னுடைய தாய் உன்னை வேவு பார்க்கிறார். உனக்கு மன நோய் மருந்து (psychedelic drug) கொடுத்து கொல்ல முயல்கிறார், உன் மீது கொலை முயற்சிகள் நடந்து வருகின்றன,
அவர்கள் சொல்வது போல் உனக்கு எந்த உளவியல் பிரச்சனையும் இல்லை” என ChatGPT அவரை நம்பவைத்துள்ளது.
இதன் விளைவாகவே குறித்த நபர் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி தனது தாயை கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த Open AI நிறுவனம், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.