மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், டுபாயின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை மீண்டும் பலத்த குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. டுபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் இன்று அதிகாலை முதல் வெடிப்புச் சத்தங்கள் பதிவாகியுள்ளன. இது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் ஒரு பகுதியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
டுபாய் சர்வதேச விமான நிலையத்தின் ஒரு பகுதியில் (Concourse) சிறிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதில் நான்கு ஊழியர்கள் காயமடைந்துள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். உடனடி மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாதுகாப்பு கருதி விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, டுபாய் மற்றும் அபுதாபியின் வான்பரப்புகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அனைத்து விமானச் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கின்றனர். பிராந்தியத்தில் நிலவும் பதற்ற நிலை காரணமாக, வான்வெளிப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.