பிரியாணியில் தூக்க மாத்திரை கலந்து கணவரைக் கொன்ற பெண்ணின் சிறை அனுபவம்
பிரியாணியில் தூக்க மாத்திரை கலந்து கணவரைக் கொன்ற பிரித்தானியக் குடிமகள் இந்தியாவில் தூக்கு தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தான் நிரபராதி என்றும், தன் பக்கத்து நியாயத்தை யாரும் கேட்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
2016ஆம் ஆண்டு, பிரித்தானியாவின் Derbyயைச் சேர்ந்த ரமன்தீப் கௌர் (Ramandeep Kaur Mann, 38), தன் கணவரான சுக்ஜீத் சிங்கிடம் இந்தியாவிலுள்ள அவரது வீட்டுக்கு விடுமுறைக்குச் செல்லலாம் என ஆசை காட்டியிருக்கிறார்.
இந்தியா வந்த ரமன்தீப் கௌர் தன் குடும்பத்தினருக்கு பிரியாணி சமைத்துக்கொடுத்திருக்கிறார். அந்த பிரியாணியில் ரமன்தீப் கௌர் தூக்க மாத்திரிகைகளைக் கலந்திருக்கிறார். அனைவரும் அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்க, நள்ளிரவில் தன் ரகசிய காதலனான குர்பிரீத் சிங்கை வீட்டுக்கு வரவழைத்துள்ளார் ரமன்தீப் கௌர். இருவரும் சேர்ந்து சுக்ஜீத் சிங்கைக் கொன்றுவிட்டார்கள்.
கணவனைக் கொன்றுவிட்டு, அவரது காப்பீட்டுத் தொகையுடன் காதலனுடன் புது வாழ்வைத் துவங்க திட்டமிட்ட ரமன்தீப் கௌர், தற்போது இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள ஷாஜஹான்பூர் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஒரே அறையில் 55 பெண்களுடன், அழுக்கான சிமெண்ட் தரையில் படுத்து உறங்கும் ரமன்தீப் கௌர், எப்போதும் அழுதுகொண்டே இருக்கிறார்.
நான் நிரபராதி, என்னை சிக்கவைத்துவிட்டார்கள் என்று கூறும் ரமன்தீப் கௌர், சிறையில் மோசமான நிலையில் இருக்கிறேன், யாராவது எனக்கு உதவி செய்யுங்கள் என அழுகிறார்.
தான் பிரித்தானியக் குடிமகளாக இருந்தும், தன்னை பிரித்தானிய உயர் ஸ்தானிகர் வந்து பார்க்கவேயில்லை என்று கூறும் ரமன்தீப் கௌர், தனக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், தன் பக்கத்து நியாயத்தை மக்கள் கேட்கவேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறை, நரகம் போலிருப்பதாக தெரிவித்துள்ள ரமன்தீப் கௌர், காலை 6.00 மணிக்கு எழுந்து கழிவறை செல்ல வரிசையில் காத்திருக்கவேண்டியுள்ளதாகவும், ஒரு பக்கெட்டுடன், குழாயிலிருந்து வரும் குளிர்ந்த நீரில், ஒரு சின்ன அறையில் குளிக்கவேண்டியுள்ளதாகவும், தன் அறையில் தான் மட்டுமே ஒரே வெளிநாட்டுப் பெண் என்றும் கூறுகிறார்.
சிறை கண்காணிப்பாளரான Mijaji Lal என்பவர், ரமன்தீப் கௌருக்கு இந்த சூழல் மிகவும் கடினமாக இருக்கும் என்பது தங்களுக்குத் தெரியும் என்றும், ஆகவே அவரை கவனித்துக்கொள்ள தங்களாலான உதவிகளை செய்துவருவதாகவும், அவர் ஏதாவது விளையாட்டில் சேரலாம் அல்லது மற்ற கைதிகளுக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கலாம் என்று அவரிடம் ஆலோசனை கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.