வங்காளதேசத்தில் இன்னும் இரண்டு நாட்களில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் அமெரிக்காவுடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களைப் (பருத்தி மற்றும் செயற்கை இழை) பயன்படுத்தி வங்காளதேசத்தில் தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு, அமெரிக்கச் சந்தையில் நுழையும்போது இனி ‘பூச்சிய வீத வரி’ (Zero Tariff) சலுகை வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் உலகிலேயே இரண்டாவது பெரிய ஆடை ஏற்றுமதி நாடான வங்காளதேசம், சர்வதேச சந்தையில் தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மற்றுமொரு முக்கிய அம்சமாக, வங்காளதேச தயாரிப்புகள் மீதான ஒட்டுமொத்த இறக்குமதி வரியை 20 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாகக் குறைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் சம்மதித்துள்ளது. இதற்குப் பதிலாக, அமெரிக்காவின் விவசாயப் பொருட்கள், இரசாயனங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் ஆகியவற்றுக்கு வங்காளதேசம் தனது சந்தையைத் திறந்துவிட்டுள்ளது. குறிப்பாக, போயிங் நிறுவனத்திடமிருந்து 14 விமானங்களை வாங்குவதற்கும், சுமார் 15 பில்லியன் டொலர் பெறுமதியான எரிசக்தி இறக்குமதிக்கும் வங்காளதேசம் இணங்கியுள்ளது. அண்டை நாடான இந்தியா 18 சதவீத வரிச் சலுகையைப் பெற்றுள்ள நிலையில், வங்காளதேசத்தின் இந்த 19 சதவீத வரிக்குறைப்பு மற்றும் ஆடைத் துறைக்கான விசேட சலுகைகள் ஆசிய பிராந்தியத்தில் பெரும் வர்த்தகப் போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

