அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் ஈரான் இராணுவத்திற்கும் இடையிலான போர் இன்று (ஏப்ரல் 03, 2026) 34-ஆவது நாளாக நீடிக்கிறது. இந்த மோதலுக்குத் தீர்வு காண்பதற்காக அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த ஈரானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கமல்கராஸியின் (81) இல்லம் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அவரது வீட்டின் மீது நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கமல்கராஸி படுகாயமடைந்ததுடன், அவரது குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், சமரச முயற்சியில் ஈடுபட்டிருந்த முக்கியத் தலைவரின் வீடே தாக்கப்பட்டிருப்பது போர் நிறுத்த முயற்சிகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, டெஹ்ரான் நகருக்கு அருகிலுள்ள ஈரானின் முக்கியத் தொழிற்சாலைகளை இலக்கு வைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நேற்று அதீத தீவிரத் தாக்குதல்களை நடத்தின. இதனால் அப்பகுதிகளில் பாரிய தீ விபத்துகளும் சேதங்களும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவ மையங்களைக் குறிவைத்து ஈரான் இராணுவம் நேற்று ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் (Drones) மூலம் பதில் தாக்குதல்களைத் தொடுத்தது. ஈரானின் இந்தத் தாக்குதலால் அமெரிக்கத் தளங்களில் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும், இரு தரப்புக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால் இப்பிராந்தியத்தில் போர் மேகங்கள் மேலும் சூழ்ந்துள்ளன.
சர்வதேச நாடுகள் பலவும் இந்தத் தாக்குதல்களைக் கண்டித்துள்ளதுடன், உடனடியாகப் போர் நிறுத்தத்தை அமுல்படுத்திப் பேச்சுவார்த்தைகளைத் தொடருமாறு வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக, அமைதித் தூதுவராகச் செயல்பட்ட கமல்கராஸி மீதான தாக்குதல் ஈரானிய மக்கள் மற்றும் இராணுவத்தினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போர் மேலும் விரிவடைந்தால் உலகளாவிய பொருளாதாரத்திலும் எரிபொருள் விநியோகத்திலும் பாரிய சரிவுகள் ஏற்படக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

