கல்வி கற்பதற்காக கனடா வந்த இந்திய மாணவிக்கு கிடைத்த ஏமாற்றம்: கனேடிய மாகாணம் ஒன்று எடுத்துள்ள முடிவு
கொஞ்சம் கொஞ்சமாக சேமித்த பணத்தைக் கொண்டு மாணவி ஒருவரை கனடாவுக்கு கல்வி கற்க அனுப்பியது இந்தியக் குடும்பம் ஒன்று. ஆனால், அந்த மாணவி கனேடிய மாகாணம் ஒன்றிற்கு வந்தபோது அவருக்கு ஏமாற்றம் ஒன்று காத்திருந்தது.
அந்த மாணவி கல்லூரி ஒன்றில் இணைந்து கல்வி கற்போம் என எதிர்பார்த்து பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்துக்கு வந்த நிலையில், அவருக்கு அங்கு ஒன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன, அவர் கல்லூரிக்குச் சென்று கல்வி கற்க வழிவகை செய்யப்படவில்லை.
இந்த விடயம் குறித்து சமீபத்தில் பேசிய பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண உயர் கல்வித்துறைசார் அமைச்சரான செலினா ராபின்சன் (Selina Robinson), இதுபோல் மாணவ மாணவியர் ஏமாற்றமடயாமல் தடுப்பதற்காக, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் சில நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், புதிய உயர் கல்வி நிறுவனங்கள் (post-secondary institutions), அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சர்வதேச மாணவர்களைச் சேர்ப்பதற்கு விண்ணப்பிப்பதைத் தடை செய்கிறது.
அத்துடன், சர்வதேச மாணவர்கள் இனி இத்தகைய தனியார் கல்வி நிறுவனங்களில் சேர, குறைந்தபட்ச மொழித்தேவை அவசியம் என்னும் விதியையும் அறிமுகம் செய்ய உள்ளது.
இது தொடர்பான விதிகள் குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார் அமைச்சர் செலினா ராபின்சன்.
Comments are closed.