அலெக்ஸி நவல்னியின் தாயாருக்கு அளிக்கப்பட்ட சில மணி நேர அவகாசம்

tamilnaadi 148

அலெக்ஸி நவல்னியின் தாயாருக்கு அளிக்கப்பட்ட சில மணி நேர அவகாசம்

கடும் புடின் விமர்சகரான அலெக்ஸி நவல்னியின் சடலத்தை ரகசியமாக அடக்கம் செய்ய ஒப்புக்கொள்ளுமாறு அவரது தாயாருக்கு சில மணி நேர அவகாசமே அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அலெக்ஸி நவல்னியின் தாயார் ரகசிய அடக்கத்திற்கு 3 மணி நேரத்தில் ஒப்புக்கொள்ள மறுத்தால், கடந்த வாரம் அவர் மரணமடைந்த சிறையிலேயே அடக்கப்படும் என்றும் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

மட்டுமின்றி, நவல்னி இயற்கையாகவே மரணமடைந்தார் என்று இறப்புச் சான்றிதழில் கையெழுத்துப் போட கட்டாயப்படுத்தியதாகவும் நவல்னியின் தாயார் கூறியுள்ளார். ஆனால் நவல்னியின் மனைவி யூலியா தெரிவிக்கையில், விளாடிமிர் புடினின் உத்தரவின் காரணமாகவே அவர் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

நவல்னி இறப்பு தொடர்பில் தங்கள் மீது குற்றஞ்சாட்டுவதை ஏற்க மறுத்துள்ள ரஷ்ய நிர்வாகம், மேற்கத்திய நாடுகளின் கருத்துகளையும் விமர்சித்துள்ளது.

இதனிடையே, நவல்னியின் இறப்பு தொடர்பில் தகவல் தெரிவிக்க முன்வரும் சிறை அதிகாரிகளுக்கு 20,000 யூரோ வெகுமதியும் நாட்டைவிட்டு வெளியேற உதவிகளும் செய்துதரப்படும் என்று நவல்னியின் குழுவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், எவ்வாறு எங்கே நவல்னியை அடக்கம் செய்ய வேண்டும் என்பதை அதிகாரிகள் முடிவு செய்வதை ஏற்க முடியாது என்று அவரது தாயார் உறுதிபட தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வியாழன் அன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நவல்னியின் மனைவி மற்றும் அவரது மகளை சான் பிரான்சிஸ்கோவில் சந்தித்துள்ளார்.

 

Exit mobile version