பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

25 6947c9eb14d31

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது பாரிய வன்முறையாக உருவெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக அரசியல்வாதி ஒருவரின் வீட்டுக்கு வைக்கப்பட்ட தீயில் சிக்கி சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் (BNP) அமைப்புச் செயலாளரும் தொழிலதிபருமான பெலால் ஹொசைன் என்பவரது பபானிகஞ்ச் இல்லத்திற்கு நேற்று அதிகாலை மர்ம கும்பல் ஒன்று தீ வைத்துள்ளது. வீட்டின் கதவுகளை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு, பெட்ரோல் ஊற்றித் தீ வைக்கப்பட்டதில்:

பெலால் ஹொசைனின் 7 வயது மகள் ஆயிஷா அக்தர் தீயில் கருகி உயிரிழந்தார். பெலால் ஹொசைன் மற்றும் அவரது இரு மகள்கள் (16 மற்றும் 14 வயது) பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்படுவதற்குக் காரணமாக இருந்த மாணவர் போராட்டத்தின் முக்கிய தலைவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி, கடந்த 11-ஆம் திகதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து கடந்த சில நாட்களாக இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது.

கொல்லப்பட்ட தலைவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர் என்பதால், இந்தியத் தூதரகங்கள் மற்றும் தூதுவரின் இல்லங்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

வன்முறையின் போது இந்து இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று மாலை இளைஞர்கள் நாடாளுமன்றத்தைக் கைப்பற்ற முயன்றதால் அங்கு மிகுந்த பதற்றம் நிலவியது.

கொல்லப்பட்ட ஷெரீப் உஸ்மானின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், “ஷெரீப் உஸ்மானின் தொலைநோக்குப் பார்வையைத் தேசம் என்றும் நினைவில் வைத்திருக்கும்; அவர் விடுத்த கோரிக்கைகளை அரசாங்கம் நிச்சயமாக நிறைவேற்றும்,” என்று உறுதியளித்தார்.

தற்போது அசம்பாவிதங்களைத் தவிர்க்க பங்களாதேஷில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மற்றும் விசா மையங்களுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version