உலகம்
வெப்ப அலையினால் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பா
வெப்ப அலையினால் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பா
உலகில் நிலவும் காலநிலை மற்றம் காரணமாக வேகமாக வெப்பமடையும் கண்டமாக ஐரோப்பா(Europe) மாறிவருகிறது.
ஐ.நா.வின் உலக வானிலை மையம் (WMO) மற்றும் ஐரோப்பிய யூனியனில் காலநிலை முகமை இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி ஐரோப்பிய கண்டத்தின் வெப்பம் சர்வதேச சராசரியைவிட இரண்டு மடங்கு வேகமாக அதிகரித்துவருவதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது மனிதர்களின் உடல்நலன், பனிப்பாறை உருகுதல், பொருளாதார நடவடிக்கைகளின் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கிய நகர்வை துரிதப்படுத்தினால் இந்த அபாயத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என அறிவுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய கண்டம் கடந்த ஆண்டு தனது தேவையில் 43 சதவீத மின்சாரத்தை புதுப்பிக்கித்தக்க எரிசக்தி மூலம் உருவாக்கியுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டில் 36 சதவீதமாகவே இருந்தது என்ற தகவலும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
2015ஆம் ஆண்டு பாரீஸில் காலநிலை தொடர்பாக 195 நாடுகள் இணைந்து ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. புவியின் வெப்பநிலையை 2 டிகிரி செல்சியஸுக்கு குறைவாக வைத்திருக்க வேண்டும் என்று உறுதி ஏற்றன.
எனினும், கடந்த ஐந்து ஆண்டுகள் புள்ளிவிவரங்களை ஒப்பிட்டால் ஐரோப்பிய கண்டத்தில் தொழில்புரட்சிக்கு முந்தைய அளவைக் காட்டிலும் உயர்ந்து வெப்பநிலை 2.3 டிகிரி செல்சியாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.