சுவிஸ் பயணத்தை ரத்து செய்த ஈரான் ஜனாதிபதி
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், உலகளாவிய அகதிகள் மன்றம் என்னும் உலகத் தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த ஈரான் ஜனாதிபதி, திடீரென தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், நேற்று(13) முதல், எதிர்வரும் 15ஆம் திகதி வரை, உலகளாவிய அகதிகள் மன்றம் என்னும் நிகழ்வு நடைபெற உள்ளது.
உலகத் தலைவர்கள் பலர் பங்கேற்கும் அந்த நிகழ்ச்சியில், ஈரான் சார்பில் கலந்து கொள்ளும் குழுவின் தலைவராக, ஈரான் ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசி ஜெனீவா செல்ல திட்டமிட்டிருந்தார்.
எனினும் அவர் திடீரென தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார். அதற்குக் காரணம், ஈரான் ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசியைக் கைது செய்ய அவரது எதிரணியைச் சேர்ந்த மூன்று பேர் சுவிஸ் அட்டர்னி ஜெனரலிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
ஆகவே, இப்ராஹிம் ரைசி ஜெனீவா செல்லும் நிலையில் கைது செய்யப்படலாம் என்பதாலேயே, அவர் திடீரென தனது பயணத்தை ரத்துசெய்துவிட்டதாக கருதப்படுகிறது.
இப்ராஹிம் ரைசி ஈரானின் டெஹ்ரான் மாகாண அரசின் துணைத்தலைவராக இருந்தபோது, இனப்படுகொலை மற்றும் மனித இனத்துக்கெதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.