உலகம்

இஸ்ரேல் ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும்: இஸ்லாமிய நாடுகளுக்கு கோரிக்கை

Published

on

இஸ்ரேல் ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும்: இஸ்லாமிய நாடுகளுக்கு கோரிக்கை

காஸா பகுதியில் அமைதி திரும்ப ஒரே வழி இது தான் என சவுதி அரேபியாவில் முன்னெடுக்கப்பட்ட இஸ்லாமிய அரேபிய உச்சிமாநாட்டில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபிய தலைநகரில் அரேபிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஈரானிய ஜனாதிபதி ஆகியோர் கலந்துகொண்ட உச்சிமாநாட்டில், காஸா மீதான இஸ்ரேல் ராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இஸ்ரேல் – ஹமாஸ் போரானது எஞ்சிய மத்திய கிழக்கு நாடுகளிலும் வியாபிக்கலாம் என்ற அச்சமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் முன்னெடுத்த அதிரடி தாக்குதலை அடுத்து, இஸ்ரேல் போர் பிரகடனம் செய்துள்ளதுடன், தற்காப்பு என அறிவித்து, இதுவரை முன்னெடுத்த கொடூர தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் 11,000 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே சவுதி அரேபியா முக்கியமான உச்சிமாநாடு ஒன்றை முன்னெடுத்தது. இதில் முதல் முறையாக அரேபிய தலைவர்களும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களும் ஒன்றாக ஒரே மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

காஸா பகுதியில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அனைத்து குற்றச் செயல்களுக்கும் இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என்று சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் சல்மான் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், காஸா பிராந்தியத்தில் பாதுகாப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்க ஒரே வழி இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் முற்றுகையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதுதான் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சவுதி அரேபியாவில் முதல் முறையாக வருகை தந்துள்ள ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய கொடூர நடவடிக்கைகளுக்கு இஸ்லாமிய நாடுகள் ஒருமனதாக அந்த நாட்டின் ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதனிடையே, இஸ்ரேலும் அதன் முக்கிய ஆதரவாளரான அமெரிக்காவும் இதுவரை போர்நிறுத்தத்திற்கான கோரிக்கைகளை நிராகரித்துள்ளதற்கு அரேபிய மற்றும் இஸ்லாமிய தலைவர்களால் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version