இந்தியா

பழங்குடி பெண்ணுக்கு கொடூரம்! பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவி சித்ரவதை

Published

on

பழங்குடி பெண்ணுக்கு கொடூரம்! பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவி சித்ரவதை

இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தில் தமிழக பழங்குடி பெண்ணை திருட்டை ஒப்புக் கொள்ளக் கூறி நிர்வாணப்படுத்தி, பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவி ஆந்திர பொலிசார் சித்ரவதை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகாவில் உள்ள புலியாண்டபட்டி பகுதியில் உள்ள குறவர் இன மக்கள் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக பழங்குடி பெண்,”கடந்த ஜூன் மாதம் 11 ஆம் திகதி என் கணவர் வைரமுத்துவை தேடி ஆந்திர மாநிலம் சித்தூர் பொலிசார் வந்தனர். அப்போது நான், என் கணவர் கூலி வேலைக்காக கேரளாவுக்கு சென்றிருக்கிறார் எனக் கூறினேன்.

ஆனால், அவர்கள் அன்று இரவே என்னையும், என் மாமியாரையும் சித்தூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, திருட்டை ஒப்புக் கொள்ளுமாறு அடித்து சித்திரவதை செய்தனர். அதுமட்டுமில்லாமல், நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து அங்குள்ள பொலிசார் ரசித்தனர். சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை பகிர்ந்து விடுவதாகவும் மிரட்டினர்.

மேலும், திருட்டை பற்றி தெரியாது எனக் கூறி அழுத என்னை பொலிசார் அடித்து துன்புறுத்தினர். சில பொலிசார் என்னை பிடித்துக் கொள்ள, என் ஆடையை அவிழ்த்து பிறப்புறுப்பில் மிளகாய் பொடியை தேய்த்து சித்ரவதை செய்தனர். அவர்கள் 5 நாள்கள் தொடர்ந்து துன்புறுத்தியதை தாங்க முடியாமல் திருட்டை ஒப்புக் கொண்டேன்.

அவர்கள் என்னை மட்டுமல்ல, என் மாமியார் உள்பட கிராமத்தைச் சேர்ந்த 5 பேரை திருட்டை ஒப்புக் கொள்ளுமாறு சித்ரவதை செய்தனர்” என்று அவர் கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், இச்சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி பொலிசாருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் ஆந்திர பொலிசாருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.

அதனால், இந்த விசாரணையை சிபிஐ விசாரிக்க வேண்டும். ஆந்திர பொலிசாருக்கு ஆதரவாக செயல்பட்ட 20 தமிழக பொலிசாரை பணிநீக்கம் செய்தும், தங்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மணிப்பூர் மாநிலத்தில் 2 பழங்குடி பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், மேலும் ஒரு சம்பவம் நடைபெற்றது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Exit mobile version