லயோனல் மெஸ்சியின் இந்திய விஜயம்: உற்சாக வரவேற்பு, பின் வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்கள்!

default

அர்ஜென்டினா அணியின் கேப்டனும், உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரருமான லயோனல் மெஸ்சி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று (டிசம்பர் 14) கொல்கத்தா நகருக்கு வருகை தந்தார். அவரது வருகைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், எதிர்பாராத சம்பவங்கள் மைதானத்தில் வன்முறையில் முடிந்துள்ளன.

மெஸ்சியைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கொல்கத்தாவில் திரண்டு வந்து, மிகுந்த உற்சாகத்துடன் கோஷங்களை எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில், கையில் உலகக் கோப்பையைப் பிடித்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்ட 70 அடி உயர மெஸ்சியின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சிலையை மெஸ்சி காணொளி மூலம் திறந்து வைத்தார். அப்போது ரசிகர்கள் இந்தியா மற்றும் அர்ஜென்டினாவின் கொடிகளை உயர்த்திப் பிடித்திருந்தனர்.

மெஸ்சியின் வருகையை ஒட்டி 78,000 இருக்கை வசதி கொண்ட சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான டிக்கெட்டுகள் ரூ. 7,000 வரை விற்கப்பட்டன.

மைதானத்திற்கு வருகை தந்த மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் கோஷம் எழுப்பினர். எனினும், அவரைச் சுற்றி அதிகாரிகள் இருந்ததால், அவரைச் சரியாகப் பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் கோபமடைந்தனர்.

நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மெஸ்ஸி மைதானத்தைச் சுற்றி வலம் வருவார் என்று கூறியிருந்த நிலையில், அவர் பாதியிலேயே நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வெளியேறினார்.

இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் மைதானத்தில் இருந்த பொருட்களைச் சூறையாடத் தொடங்கினர். அவர்கள் தண்ணீர் பாட்டில்களை எறிந்தும், மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையை அடித்து நொறுக்கியும் வன்முறையில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வன்முறைச் சம்பவத்தின் போது, “இன்று எனக்குத் திருமணம். ஆனால் எல்லாவற்றையும் விட்டு விட்டு மெஸ்ஸியைப் பார்ப்பதற்காக வந்தேன். ஆனால் கடைசி வரை அவரைக் காண முடியவில்லை,” என ஒரு ரசிகர் தனது ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version