ஜேர்மனியில் மருத்துவத் தாதி ஊசியில் உப்பை ஏற்றினாரா?
ஜேர்மனியில் வைரஸ் தடுப்பூசி ஏற்றிய ஆயிரக்கணக்கானோருக்கு மருந்துக்குப் பதிலாக போலியாக உப்பு நீர் செலுத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
வைரஸ் தடுப்பூசியை எதிர்ப்பவர் எனக் கூறப்படும் மருத்துவத் தாதி ஒருவரை விசாரணை செய்ததன் மூலம் அவர் ஒரு குறிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் தடுப்பூசியில் மருந்துக்குப் பதிலாக உப்புக் கரைசலை (Saline) செலுத்தி வந்திருப்பது தெரியவந்துள்ளது.
செஞ்சிலுவைச் சங்கத்தில் பணிபுரிந்து வருகின்ற ஒரு மருத்துவத் தாதியே இவ்வாறு அரசியல் நோக்கத்தில் திட்டமிட்டு உப்புநீர் கரைசலைத் தடுப்பூசி என்று ஏமாற்றி ஏற்றியுள்ளார்.நாட்டின் வடக்கே கடற்கரையோர கிராமப் புறங்களை உள்ளடக்கிய பிறைஸ்லான்ட் (Friesland) என்ற இடத்திலேயே இந்தத் தடுப்பூசி மோசடி இடம்பெற்றுள்ளது.
ஏழு பேருக்கு மட்டுமே உப்புக் கரைசல் ஏற்றப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கடந்த மார்ச்- ஏப்ரல் மாத காலப்பகுதியில் தடுப்பூசி மையம் ஒன்றில் குறிப்பிட்ட மருத்துவத் தாதியிடம் தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட
பல நூற்றுக்கணக்கானவர்களுக்கு இவ்வாறு போலியான மருந்து செலுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அந்தப் பிரதேசத்தில் சுமார் எட்டாயிரம் பேரில் பலர் உப்பு ஊசி செலுத்தப்பட்டவர்களாக இருக்கலாம் என்பதால் அங்குள்ளோரை மூன்றாவது ஊசி ஒன்றை ஏற்றிக்கொள்ளுமாறு உள்ளூர் அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்னர்.
40 வயதுடைய பிரஸ்தாப மருத்துவப் பணியாளர் கொரோனா தடுப்பூசியையும் அதனை முன்னெடுத்து வருகின்ற அரசின் திட்டங்களையும் தனது சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிப்பவர் என்றும் அந்த அடிப்படையில் அவர் மீதான சந்தேகங்களை விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“saline solution” எனப்படுகின்ற சோடியம் குளோரைட் உப்பு நீர் கரைசல் (mixture of sodium chloride) உடலில் செலுத்தப்படுவ தால் எந்த தீங்கும் ஏற்படவாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த உப்பு நீர்க் கரைசல் மருத்துவமனைகளில் பயன்பாட்டில் உள்ளது.
ஏனைய பல நாடுகளைப் போலவே ஜேர்மனியிலும் கொரோனா தடுப்பூசிக்கு எதிர்ப்பு வலுவாக உள்ளது. எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஓர் புது உத்தியாகப் பார்க்கப்படுகின்ற இந்த உப்பு ஊசி முறைகேடு பற்றிய தகவல் ஊடகங்களில் முக்கிய இடம்பிடித்துள்ளது.
Leave a comment