காபூல் வான் தளத்தில் அல்லோலம் – சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!
பாஸ்போர்ட், வீஸா இன்றிக் குவிந்த ஆப்கானியர்களால் பெரும் குழப்பம்
- விமானங்களில் தொங்கி ஏறுவதற்கு முயன்றவர்களைக் கலைக்கச் சூடு !!
- அமெரிக்க விமானத்தில் தொற்றிய மூவர் வானில் இருந்து வீழ்ந்து பலி!
காபூலில் உள்ள விமான நிலையத்தின் சிவில் மற்றும் இராணுவ விமான சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று பென்ரகன் அறிவித்துள்ளது. அங்கு உருவாகிய பெரும் குழப்பங்களை அடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்கப் பிரஜைகளை ஏற்றிக்கொண்டு ஓடுபாதையில் நகர்ந்த இராணுவ விமானம் ஒன்றைப் பெரும் எண்ணிக்கையானோர் பின் தொடர்ந்து ஓடி அதனைத் தடுத்து தொங்கி ஏற முற்பட்ட காட்சிகள் வெளியாகி உள்ளன. பின்னர் வானில் எழுந்து உயரத்தில் பறந்த அந்த அமெரிக்க விமானத்தில் இருந்து மூவர் தரையை நோக்கிக் கீழே வீழ்கின்ற பேரவலக் காட்சிகள் உலகை உலுக்கியிருக்கின்றன. மீட்புப் பணிகளில்
ஈடுபட்டுள்ள விமானங்களின் வெளிப்புறங்களில் ஏறி நிற்பவர்களால் விமானப் பறப்புகள் தடைப்பட்டுள்ளன.
விமானங்களைப் பறக்கவிடாமல் தடுத்த கூட்டத்தினரைக் கலப்பதற்காக அங்குள்ள அமெரிக்கப் படையினர் வானத்தை நோக்கிச் சுட நேர்ந்தது. ஓடுபாதைகளில் இருந்து சனக் கூட்டத்தை விரட்டுவதற்காகப் பெரும் ஒலி எழுப்பும் ‘அபாச்சி’ (Apache) ஹெலிக்கொப்ரர்கள் பயன்படுத்தப்பட்டன.
அச்சம் காரணமாக வெளியேற முற்பட்ட ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் காபூல் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ளதால் அங்கு பெரும் களேபரமான நிலைமை உருவாகி உள்ளது. வெளிநாட்டுப் பிரஜைகளோடு சேர்ந்து தாங்களும் விமானங்களில் தப்பிச்செல்லலாம் என்ற எண்ணத்துடன் உள்ளூர்வாசிகளும் விமானநிலையத்துக்குப் படையெடுத்துள்ளனர். காவலர்கள் முட்கம்பித் தடைகளைப் போட்டு அவர்களைத் தடுக்க முற்பட்டுள்ளனர். விமான நிலையத்தின் சுற்று வேலியைத் தாண்டியும் பலர் உள்ளே பாய்ந்துள்ளனர்.
பல நூற்றுக் கணக்கானோர் கடவுச் சீட்டு, வீஸா எதுவும் இன்றி விமானநிலையத்துக்கு வந்து பயணங்களுக்காகக் காத்து நிற்கின்றனர். இதனால் அங்கு பெரும் குழப்பமான நிலை காணப்படுகின்றது என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அச்சம் காரணமாகத் தலைநகரில் இருந்து வெளியேறுவோரை தலிபான் படைகள் தடுத்துவருகின்றன எனக் கூறப்படுகிறது. நகர மக்கள் வெளியேறுவதை அனுமதிக்குமாறு தலிபான்களிடம் கோருகின்ற கூட்டு அறிக்கை ஒன்றை சுமார் 60 நாடுகள் இணைந்து வெளியிட்டிருக்கின்றன.
தப்பியோடுவோரைத் தேடிப் பிடித்துக் கொல்லும் செயலை தலிபான்கள் ஆரம்பித்துள்ளனர் என்று ஐ.நா. குற்றஞ்சாட்டி உள்ளது. ஆப்கானிஸ்தானின் அதிகாரம் தலிபான்கள் வசமாகி 24 மணிநேரம்
கடந்துவிட்ட நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடர்ந்து மௌனமாக இருந்து வருவதை ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. இந்நிலையில் அமெரிக்க மக்களுக்கான பைடனின் உரை மிக விரைவில்
இடம்பெறும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை விலக்கிய பின்னர் அந்த நாட்டு விவகாரத்தை பைடன் நிர்வாகம் மிக மோசமான வழிமுறைகளில் கையாண்டுள்ளது என அமெரிக்கா மீது சர்வதேச கண்டனங்கள்
எழுந்துள்ளன.
Leave a comment