ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி மீண்டும் வழமைக்கு: பண்டமாற்று முறைமை மூலம் விநியோகம்!

1 EVALUATING TEA FP

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிய அமைதியற்ற சூழல் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த இலங்கையின் தேயிலை ஏற்றுமதி, தற்போது மீண்டும் வேகம் பெற்றுள்ளது.

கடந்த ஜனவரி மாத ஆரம்பத்தில் பிராந்திய அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை மற்றும் அமெரிக்காவின் தலையீடு குறித்த அச்சம் காரணமாக, ஈரானுக்கான கப்பல் போக்குவரத்து சுமார் ஒரு வார காலம் முடங்கியிருந்தது.

தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால், ஏற்றுமதியாளர்கள் டுபாய் (Dubai) வழியாக மீண்டும் தேயிலை பொதிகளை ஈரானுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளதாகத் தேயிலை சபைத் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட விசேட உடன்படிக்கையின் கீழ், பணப் பரிமாற்றங்களுக்குப் பதிலாக பண்டமாற்று முறைமையின் மூலம் இந்தத் தேயிலை ஏற்றுமதி நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

ஈரானின் வருடாந்த தேயிலை தேவை சுமார் ஒரு இலட்சம் மெட்ரிக் டன் ஆகும்.ஈரானின் உள்நாட்டுத் தேயிலை உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளதால், அந்நாடு இறக்குமதியையே பெரிதும் நம்பியுள்ளது.

இலங்கைத் தேயிலையின் தனித்துவமான சுவை மற்றும் தரம் காரணமாக, ஈரானிய சந்தையில் ‘சிலோன் டீ’ (Ceylon Tea) இற்கு எப்போதும் அதிக கேள்வி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version