ஆப்கானை விட்டுச் சென்ற அதிபர் அஷ்ரஃப் கனி!!

Ashraf Ghani

ஆப்கானை விட்டுச் சென்ற அதிபர் அஷ்ரஃப் கனி!!

ஆப்கானிஸ்தானை விட்டு அந்த நாட்டின் அதிபர் அஷ்ரஃப் கனி சென்று விட்டார் என்று அங்குள்ள அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவருகின்றன.

தலைநகர் காபூலை தலிபன் போராளிகள் சூழந்துள்ள வேளையில், இந்த செய்தி வெளிவந்துள்ளது. அந்த நாட்டின் துணை அதிபர் அம்ருல்லா சாலேயும் நாட்டை விட்டுச் சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளையும் தலிபன்கள் தங்களுடைய கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து விட்டனர். பல மாகாணங்களில் ஆளுநர்கள் தாங்களாகவே ஆட்சி அதிகாரத்தை தலிபன்களிடம் ஒப்படைத்து விட்டு சரணடைந்து விட்டனர்.

இந்த நிலையில், தலிபன்கள் ஆக்கிரமிப்பைத் தொடங்கிய 10 நாள்களுக்குள்ளாகவே நாட்டின் அனைத்து இடங்களிலும் அவர்களின் போராளிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே, இன்று பிற்பகலில் ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா. சிறப்புப் பிரதிநிதியுடன் அதிபர் அஷ்ரஃப் கனி ஆலோசனை நடத்தியுள்ளார் என்று தகவல் வெளிவந்தது.

தலிபன்கள் வசம் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாடு செல்வதால், அதிபர் பதவியில் இருந்து அஷ்ரஃப் கனி பதவி விலக வேண்டும் என்று அவருக்கு அழுத்தம் அதிகரித்தது.

அவரது அமைச்சரவையில் இருந்த பலரும் அமைதியாக ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று இன்று மாலையில் அறிவித்தனர்.

இந்த நிலையில், அதிபர் அஷ்ரஃப் கனி நாட்டை விட்டு சென்றுவிட்டார் என்று தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

Exit mobile version