சீனாவில் களைகட்டிய உலக இந்தி தினம்: ஷாங்காய் இந்தியத் தூதரகத்தில் மாணவர்கள் உற்சாகப் பங்கேற்பு!

24632725 china

உலக இந்தி தினத்தை முன்னிட்டு சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் விசேட கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 10-ஆம் திகதி உலக இந்தி தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இம்முறை சீனாவில் அதன் தாக்கம் பரவலாகக் காணப்பட்டது.

ஷாங்காயில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், இந்தி மொழியைக் கற்கும் சீனப் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அங்கு வசிக்கும் இந்தியர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

இந்திய துணைத்தூதர் பிரதிக் மாத்தூர் இதன்போது உரையாற்றினார். அவர் கூறுகையில், “இந்தி மொழி என்பது வெறும் பேச்சுவழக்கு மட்டுமல்ல, அது எல்லைகளைக் கடந்து மக்களை இணைக்கும் ஒரு பாலமாகத் திகழ்கிறது” எனக் குறிப்பிட்டார்.

விழாவின் ஒரு பகுதியாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள உலக இந்தி தினச் செய்தியைத் துணைத்தூதர் வாசித்தார்.

சீனாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்தி மொழி ஒரு பாடமாகப் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசாரப் பரிமாற்றத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்கள் இந்தி மொழியில் கவிதைகள் மற்றும் உரைகளை நிகழ்த்தித் தங்களது மொழித்திறனை வெளிப்படுத்தினர்.

 

 

Exit mobile version