தீயில் எரிந்து பெண் பலி!!- கணவர் கைது

202005290904027261 Clothing store in the deadly fire SECVPF

வவுனியா கற்பகபுரம் பகுதியில் தீயில் எரிந்த நிலையில் குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

இன்று காலை குறித்த பெண் வசித்த வீட்டிலிருந்து புகை வெளிவருவதை அவதானித்த அயலவர்கள் உடனடியாக ஓடிச்சென்று யன்னலூடாக அவதானித்தனர்.

இதன்போது குறித்த வீட்டில் வசித்து வந்த குடும்பப்பெண் தீயில் எரிந்துகொண்டிருந்தார். உடனடியாக விரைந்து செயற்பட்ட அயலவர்கள் கதவை உடைத்து தீயை அணைப்பதற்கு முயற்சித்தபோதும் அது பலனளிக்காத நிலையில் குறித்த பெண் சாவடைந்துள்ளார்.

சம்பவத்தில் ராயகுலேந்திரன் அனித்தா என்ற 43 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே சாவடைந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்றபோது அவரது வீட்டில் யாரும் இருக்கவில்லை. எனினும் அவரது 14 வயதான மகன் மலசலகூடத்துக்கு சென்றிருந்த நிலையில் மலசலகூடத்தின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது.

சடலத்தை பார்வையிட்ட பதில் நீதவான் அதனை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது

சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் பெண்ணின் கணவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Exit mobile version