கல்வி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்: விமல் வீரவங்ச தலைமையில் நாளை சத்தியாக்கிரகப் போராட்டம்!

Wimal Weerawansa

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி, கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும் எனச் சிறுவர்களுக்கான வளர்ந்தோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தற்போதைய கல்விச் சீர்திருத்தங்கள் எந்தவொரு அறிவியல் ரீதியான ஆய்வுகளும் இன்றித் தன்னிச்சையாக முன்வைக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

இந்தத் தவறான சீர்திருத்தத்தினால் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்குப் பொறுப்பேற்றுப் பிரதமர் தனது அமைச்சர் பதவியைத் துறக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

தற்போதைய சீர்திருத்தங்களை உடனடியாக மீளப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தனது கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (12) பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்கு (இசுருபாய) முன்பாகத் தொடர்ச்சியான சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக விமல் வீரவங்ச அறிவித்துள்ளார்.

இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கல்வி மாற்றங்கள் குறித்துப் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிரான இந்தப் போராட்டம் அரசியல் ரீதியாகவும் கல்வித் துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Exit mobile version