“அசிங்கமான அமெரிக்கரான பஸில் ராஜபக்சவை அமெரிக்காவுக்கு விரட்டும்வரை எமது போராட்டம் ஓயாது. எம்மைச் சிறையில் அடைத்தால்கூட இதற்கான நடவடிக்கை நிறுத்தப்படமாட்டாது.”
– இவ்வாறு புதிய ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“நான் வலுசக்தி அமைச்சராகப் பதவி வகித்தபோது, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பரிந்துரைக்கமைய டீசல் விலையை 7 ரூபாவால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தேன். இதற்குக் கடும் எதிர்ப்பை வெளியிட்டு, என்னைப் பதவி விலகுமாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வலியுறுத்தினார். ஆனால், இன்று டீசல் விலை 55 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது சாகர காரியவசம் என்ன செய்யப் போகின்றார்?
டீசலுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என நான் முன்கூட்டியே அறிவித்தால்தான் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது என அமைச்சர்கள் கூறுகின்றனர். அப்படியானால் மருந்து, கோதுமை மா, சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு எப்படித் தட்டுப்பாடு ஏற்பட்டது? டொலர் பிரச்சினையே இதற்கு மூலகாரணம்.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, அந்நிய செலாவணி கையிருப்பை முறையாக முகாமை செய்யாததாலேயே டொலர் பிரச்சினை ஏற்பட்டது.
எனவே, தனது இயலாமையை மூடிமறைக்க எம் மீது குற்றஞ்சாட்ட வேண்டாம் என பஸில் ராஜபக்சவிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
அதேவேளை, எம்மை நீக்கிவிட்டு நாம் கூறிய விடயங்களைத் தற்போது அவசர அவசரமாக நிறைவேற்றி வருகின்றனர்.
ஒரு பணன்டோல் மாத்திரையால் குணப்படுத்தக்கூடிய நோயை, நிதி அமைச்சர் மரணம் வரை அழைத்துச் சென்றுள்ளார். இப்போதுதான் பணன்டோல் கொடுக்க முற்படுகின்றார்.
நாம் அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்பை மீறவில்லை. அரசுக்குள் கலந்துரையாடி பயன் இல்லை என்பதால்தான் மக்கள் மத்திக்கு வந்தோம்.
எமக்கு எதிராக வழக்குத் தொடுக்கலாம். சிறையில் அடைக்கலாம். ஆனாலும், நாம் பின்வாங்கமாட்டோம். அசிங்கமான அமெரிக்கரான பஸிலை அமெரிக்காவுக்கு விரட்டும் வரை எமது போராட்டம் ஓயாது” – என்றார்.
#SriLankaNews