அமெரிக்காவில் H5N5 பறவைக் காய்ச்சல் தொற்றால் ஒருவர் உயிரிழப்பு: 9 மாதங்களில் பதிவான முதல் மனித

2025 07 02T141641Z 2 LYNXMPEL610MU RTROPTP 4 HEALTH BIRD FLU

அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில், H5N5 பறவைக் காய்ச்சல் (H5N5 Avian Influenza) தொற்றினால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, அங்கு வசிக்கும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வொஷிங்டன் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இறந்தவர் வயதானவர் என்றும், அவருக்கு ஏற்கெனவே பிற உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அமெரிக்காவில் 9 மாதங்களில் பதிவாகும் முதல் மனிதப் பறவைக் காய்ச்சல் தொற்றாகும். மேலும், இந்த வைரஸ் காரணமாக அமெரிக்காவில் பதிவான இரண்டாவது மனித இறப்பும் இதுவாகும்.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC), பொதுமக்களுக்கு இந்த வைரஸால் ஏற்படும் ஆபத்து குறைவாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளது.

வொஷிங்டன் மாநில சுகாதாரத் துறை அளித்த அறிக்கையில், இறந்த நபருக்குப் பல கலப்பு நாட்டுப் பறவைகள் அடங்கிய வீட்டுப் பண்ணை (backyard flock) இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

சுகாதாரத் துறை நடத்திய சோதனையில், குறித்த பண்ணையின் சூழலில் பறவைக் காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டது. எனவே, வளர்ப்புப் பறவைகள், அவற்றின் சூழல் அல்லது காட்டுப் பறவைகளுடன் ஏற்பட்ட தொடர்பே நோயாளிக்குத் தொற்று ஏற்பட்டதற்கான மிக முக்கியமான ஆதாரமாக இருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த மற்றவர்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். எனினும், வேறு யாருக்கும் பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்படவில்லை. மனிதனுக்கு மனிதன் பரவியதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கண்டறியப்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

2022 ஜனவரியில் தொடங்கிய சமீபத்திய பறவைக் காய்ச்சல் பரவல், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் பாலூட்டிகளிடையே அதிகளவு பரவுவதைக் குறிக்கும் நிலையில், எச்சரிக்கை நடவடிக்கைகளாக:

விலங்குகளுடன் நெருங்கிப் பணிபுரியும் அனைவரும் தகுந்த பாதுகாப்புக் கவசங்களை அணியுமாறும், விலங்குகளின் கழிவுகள் இருக்கும் பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வீட்டுப் பறவைகள் அல்லது காட்டுப் பறவைகளுடன் தொடர்பு கொள்ளக்கூடிய அனைவரும் சாதாரண காய்ச்சல் தடுப்பூசிகளை (flu shots) செலுத்திக் கொள்ளுமாறு வொஷிங்டன் சுகாதாரத் துறை பரிந்துரைக்கின்றது.

Exit mobile version