கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பும், கல்வியும் கிடைப்பதே மருந்தாக அமையும் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தமிழ்நாட்டில் சோகத்தையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தனிநபர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி அருணா ஜெகதீசனிடம் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்த அவரது பதிவில், “உயிரிழப்புக்கு ஆளான 41 குடும்பங்களிலும் நீங்கள் ஆய்வு மேற்கொண்டிருப்பீர்கள். அந்தக் குடும்பங்களில் வேலை வாய்ப்புக்கு வயதுடையவர்களையும், கல்வி கற்கும் வாய்ப்புடையவர்களையும் அரசுக்கு நீங்கள் அறிக்கையில் குறித்து அறிவிக்க வேண்டும். பலியானோர் பலரும் அடித்தட்டு மற்றும் நடுத்தட்டு வர்க்கத்து நலிந்தவர்கள்தாம். வேலைவாய்ப்பும், கல்வியுமே அவர்களின் மாபெரும் துயரத்திற்கு மருந்தாக முடியும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், இறந்தவர்களுக்கு நியாயம் செய்வதும் இருப்பவர்களுக்கு நீதி செய்வதுமே அறமாகும். இந்தப் பணியை நீங்கள் இப்போதே முடித்திருந்தால் அது சமூக தர்மமாகும். உங்கள் அறிக்கை பட்டழிந்தோர் கண்ணீரைத் தொட்டுத் துடைக்கும் சுட்டு விரலாகட்டும் என்றும் கூறியுள்ளார்.