அமெரிக்காவின் முகமூடி கிழிந்துவிட்டது: வெனிசுலா ஆக்கிரமிப்பு குறித்து ரவூப் ஹக்கீம் கடும் கண்டனம்!

images 10 2

வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள இராணுவ ஊடுருவல் மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கைது ஆகியவற்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், சர்வதேசச் சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தை மீறி, ஒரு நாட்டின் இறையாண்மையைப் பலவந்தமாகப் பறிக்கவோ அல்லது ஆட்சி மாற்றத்தை (Regime Change) ஏற்படுத்தவோ எந்தவொரு வல்லரசுக்கும் உரிமையில்லை.

அமெரிக்காவின் தற்போதைய டிரம்ப் நிர்வாகம், பிற நாடுகளின் இயற்கை வளங்கள் மீது கொண்டுள்ள பேராசையினால் இவ்வாறான ‘சாகசப்போக்கு’ நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இது சர்வதேச அமைதிக்கு விடப்பட்ட சவால் என அவர் சாடியுள்ளார்.

இயற்கை வளங்களின் மீதான முழு இறையாண்மையும் அந்தந்த நாடுகளுக்கே உரியது. ஆனால், அமெரிக்கா தனது சுயநல புவியியல் மற்றும் அரசியல் இலக்குகளுக்காக உலக ஒழுங்கை நிலைகுலையச் செய்கிறது.

இவ்வாறான ஒருதலைப்பட்சமான அத்துமீறல்கள் தடையின்றித் தொடருமானால், அது மனிதகுலத்தை மற்றொரு உலகப்போரை நோக்கித் தள்ளிவிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மோதல்களைத் தீர்க்கப் பரஸ்பரக் கலந்துரையாடல்களும் ஒத்துழைப்புமே ஒரே வழி எனத் தெரிவித்துள்ள அவர், பலவீனமான நாடுகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒடுக்குமுறைகளைச் சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

 

Exit mobile version