ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 48வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

UNHRC 11

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் மனித உரிமை முன்னேற்றம் தொடர்பாக மீளாய்வு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 48வது கூட்டத் தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகின்றது.

இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது மனித உரிமைகள் கூட்டத்தொடரின் 46வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இன நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை மேம்பாடு தொடர்பான யோசனைகள் தொடர்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் தமது கருத்துக்களை முன்வைக்க உள்ளார்.

இக் கூட்டத் தொடரின் 47 உறுப்பு நாடுகளும் இது தொடர்பான கருத்துக்களை முன்வைக்க உள்ளன.

இதன்போது சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் பல கருத்துக்களை முன்வைக்க உள்ளதுடன், இலங்கை அரசாங்கம் சார்பில் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி இது தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க உள்ளார்.

இலங்கையைத் தவிர ஆப்கானிஸ்தான், நிக்கரகுவா, எத்தியோப்பியா, மியன்மார் மற்றும் யெமன் போன்ற நாடுகளின் மனித உரிமை விடயம் தொடர்பிலும் ஆணையாளர் தனது கருத்துக்களை முன்வைப்பார். இந்த அமர்வு எதிர்வரும் எட்டாம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version