மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான கடல்சார் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உலகின் 20 சதவீத எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதால், சுமார் 20,000 மாலுமிகள் மற்றும் 15,000 சுற்றுலா பயணிகள் கடலில் வெளியேற முடியாமல் சிக்கித் தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) கவலை தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மற்றும் தூதரகங்கள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் விளைவாக, வர்த்தகக் கப்பல்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயணிக்கும் சொகுசுக் கப்பல்கள் (Cruise Ships) பாதுகாப்பற்ற சூழலில் நடுக்கடலில் நங்கூரமிட்டுள்ளன. போர் தொடங்கிய கடந்த சனிக்கிழமை முதல் இதுவரை 7 கப்பல் விபத்துகள் பதிவாகியுள்ளன என்றும், இதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“இது வெறும் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல, ஒரு மனிதாபிமானப் பிரச்சினை. அப்பாவி மாலுமிகள் மீது நடத்தப்படும் எந்தத் தாக்குதலையும் நியாயப்படுத்த முடியாது” என்று IMO பொதுச் செயலாளர் ஆர்செனியோ டோமிங்குவேஸ் (Arsenio Dominguez) தெரிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் எண்ணெய் டாங்கர்களின் எண்ணிக்கை 90 சதவீதம் குறைந்துள்ளதால், உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சிக்கியுள்ள மாலுமிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாப்பாக வெளியேற்ற சர்வதேச நாடுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தேவைப்பட்டால் அமெரிக்கக் கடற்படை எண்ணெய் டாங்கர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இருப்பினும், வான்பரப்பு மற்றும் கடல் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், மீட்புப் பணிகளில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. சிக்கியுள்ள பயணிகள் மற்றும் ஊழியர்களின் குடும்பத்தினர் மிகுந்த கவலையுடன் காத்துக் கிடக்கின்றனர்.

