பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை முறை மாற்றம்: நிரந்தர பாதுகாப்பு இனி இல்லை!

09 1

பிரித்தானியாவில் புகலிடம் கோருபவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு இனி நிரந்தரமானது அல்ல என்று உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இனி புகலிடம் பெறுபவர்களுக்கு தற்காலிக பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும், மேலும் அவர்களின் வழக்குகள் ஒவ்வொரு 30 மாதங்களுக்கும் (2.5 ஆண்டுகள்) ஒருமுறை மறுஆய்வு செய்யப்படும். இந்த மறுஆய்வின் போது சம்பந்தப்பட்டவரின் தாய்நாடு பாதுகாப்பானது எனத் தீர்மானிக்கப்பட்டால், அவர்கள் மீண்டும் அந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுவார்கள். இருப்பினும், துணையின்றி வரும் சிறுவர்களுக்கு இந்த 30 மாத மறுஆய்வு விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஏதிலிகள் நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போதுள்ள 5 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகள் வரை அதிகரிக்கப்படவுள்ளது. சாதாரண குடியேறிகளுக்கு இந்த கால அவகாசம் 5 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படுகிறது. டென்மார்க் பயணத்திற்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ள உள்துறைச் செயலர், அகதிகள் தங்குவதற்கான விடுதி முறையை ஒழித்து, அவர்களை அடிப்படை வசதிகள் கொண்ட பொது விடுதிகளுக்கு மாற்றப் போவதாகவும் உறுதியளித்துள்ளார்.

“சட்டவிரோதமாகப் படகுகள் மூலம் வருபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே எமது நோக்கம். ஏதிலி அந்தஸ்து என்பது ஒருவருக்கு நிரந்தரக் குடியுரிமையை உடனே பெற்றுத் தரும் என்ற எண்ணத்தை மாற்றப்போகிறோம்” என ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 41,472 பேர் சிறிய படகுகள் மூலம் ஆங்கில கால்வாயைக் கடந்து பிரித்தானியா வந்துள்ளனர், இது 2024 ஆம் ஆண்டை விட 5,000 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முடிவானது தீவிர வலதுசாரி கொள்கைகளைப் பின்பற்றுவது போல் இருப்பதாகத் தொழிற்கட்சியின் இடதுசாரி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ‘அகதிகள் கவுன்சில்’ போன்ற அமைப்புகள், ஒவ்வொரு 30 மாதமும் லட்சக்கணக்கானோரின் கோப்புகளை மீண்டும் ஆய்வு செய்வது தேவையற்ற செலவையும் நிர்வாகச் சிக்கலையும் ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளன. ஏதிலிகள் தற்காலிக நிலையில் இருக்கும்போது அவர்களுக்கு வேலை வழங்குவதற்கு நிறுவனங்கள் தயங்கும் என்றும், இது சமூக ஒருங்கிணைப்பைப் பாதிக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Exit mobile version