கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தனது உடலுக்குள் கொக்கைன் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 47 வயதான உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
உகாண்டாவின் கம்பாலாவிலிருந்து வந்திருந்த அந்தப் பெண்ணின் நடத்தையில் சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள், அவரைத் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். இதன்போது, அவர் 21 சிறிய குப்பிகளில் பொட்டலமிடப்பட்ட 274 கிராம் கொக்கைனைத் தனது உடலுக்குள் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 12.33 மில்லியன் (1 கோடியே 23 இலட்சம்) இலங்கை ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேக நபர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
விமான நிலையம் ஊடாக முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்களை முறியடிக்க சுங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.