குமட்டல் மற்றும் வாந்திக்காக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் நச்சுத்தன்மை அடைந்ததால், ஹபரகட மற்றும் மத்துகம பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ள சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (22) விசேட கூற்றொன்றை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றினார்.
எதிர்க்கட்சித் தலைவர் தனது உரையில் கண்டி வைத்தியசாலையில் நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனைகளில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளில் பாக்டீரியாக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தடுப்பூசிகள் திரும்பப் பெறல்: இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை (NMRA) வைத்தியசாலை கட்டமைப்பிலிருந்து 2,70,000 இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகளை அவசரமாகத் திரும்பப் பெற்றுள்ளதாக அவர் வெளிப்படுத்தினார்.
இந்தத் தடுப்பூசிகள் அவசரக் கொள்வனவு மூலம் பெறப்பட்டவையா? தரப் பரிசோதனைகள் முறையாக நடத்தப்பட்டனவா? அதன் முடிவுகள் என்ன? என்பது குறித்து அரசாங்கம் நாட்டுக்கு உண்மையை விளக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தால் (WHO) அங்கீகரிக்கப்பட்ட ஆய்வக வசதிகள் இலங்கையில் உள்ளனவா என்பதையும், கடந்த வரவு செலவுத் திட்டங்களில் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் நிலை என்ன என்பதையும் அவர் கேள்வி எழுப்பினார்.
தரமற்ற மருந்து மாபியாக்களுக்கு எதிராகப் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்த சஜித் பிரேமதாச, சுகாதார அமைச்சர் தனது பொறுப்பிலிருந்து விலகிச் செயற்பட முடியாது எனவும் எச்சரித்தார். மேலும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகியவை சேனக பிபிலே மருந்துக் கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும், மக்களின் சுகாதார உரிமையைப் பாதுகாக்கத் தொடர்ந்து குரல் கொடுப்போம் எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.