ஈரானில் வெடித்துள்ள மக்கள் போராட்டங்களை வன்முறையால் அடக்க முயன்றால், அந்நாட்டு உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்படலாம் என அமெரிக்கக் குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கிரஹாம் தெரிவித்த முக்கிய விடயங்கள். ஈரானிய மக்கள் சிறந்த வாழ்வாதாரத்திற்காகப் போராடும் போது, அவர்களை அரசு தொடர்ந்து கொன்று குவித்தால், டொனால்ட் டிரம்பின் பதில் மிகக் கொடூரமானதாக இருக்கும்.
உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்கும் அயதுல்லா அலி கமேனியைத் தீர்த்துக்கட்டவும் அதிபர் டிரம்ப் தயங்கப்போவதில்லை.
வெனிசுலா அதிபர் மதுரோவைக் கைது செய்ய அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது போல, டிரம்பின் எச்சரிக்கைகள் வெறும் வார்த்தைகளாக மட்டும் இருக்காது என்பதை ஈரான் புரிந்துகொள்ள வேண்டும்.
ஈரான் ரியால் (Rial) நாணயத்தின் மதிப்பு டொலருக்கு எதிராகக் கடுமையாகச் சரிவடைந்ததால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியே இந்தப் போராட்டங்களுக்குக் காரணமாகும்.
கடந்த சில வாரங்களாக நடைபெறும் போராட்டங்களில் இதுவரை 36-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2,000-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் இந்த அச்சுறுத்தல்களுக்கு ஈரான் ராணுவம் மிகக் கடுமையான பதிலடியைத் தந்துள்ளது:
“அமெரிக்கா ஏதேனும் தவறான இராணுவ நடவடிக்கையை எடுத்தால், எங்களின் பதில் மிகத் தீவிரமாக இருக்கும். ஆக்கிரமிப்பாளர்களின் கரங்களை நாங்கள் துண்டிப்போம்.”
அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறை பயன்படுத்தப்பட்டால், அவர்களைப் பாதுகாக்க அமெரிக்கா தலையிடும் என அதிபர் டிரம்ப் ஏற்கனவே தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

