அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் தீர்மானமிக்க சட்டமூலமாக அமையவுள்ள ‘சேவ் அமெரிக்கா’ (Save America Act) சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு, தனது கட்சி மற்றும் எதிர்க்கட்சி செனட் உறுப்பினர்களுக்கு அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது எக்ஸ் (X) மற்றும் ட்ரூத் சோஷியல் (Truth Social) பக்கங்களில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அமெரிக்கத் தேர்தல் முறையில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்பட்டு, பாரிய மாற்றங்கள் ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டமூலத்தின் கீழ், வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படுதல் மற்றும் வாக்காளர் பதிவின் போது அமெரிக்கக் குடியுரிமைக்கான அசல் ஆவணங்களைச் சமர்ப்பித்தல் போன்ற கடுமையான விதிகள் கொண்டுவரப்படவுள்ளன. அத்துடன், தேர்தல் முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாகத் தான் கருதும் தபால் மூல வாக்களிப்பு (Mail-in voting) முறைக்குத் தடை விதித்தல், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்பதைத் தடுத்தல் மற்றும் சிறுவர்களுக்கான பாலின மாற்று அறுவை சிகிச்சைகளைத் தடை செய்தல் போன்ற சமூக ரீதியான சட்டப் பிரிவுகளையும் இதில் ட்ரம்ப் சேர்த்துள்ளார்.
இந்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கும் உறுப்பினர்களை “மனநலம் குன்றியவர்கள்” (Sick, demented, or deranged) என மிகக் காட்டமாக விமர்சித்துள்ள ட்ரம்ப், அவர்களுக்குத் தான் ஒருபோதும் அரசியல் ரீதியான ஆதரவை (Endorsement) வழங்கப்போவதில்லை எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும், செனட் சபையில் 60 வாக்குகளைப் பெற்றுத் தடையைத் தாண்டத் தவறினால், வரும் தேர்தலில் அந்த உறுப்பினர்களுக்கு எதிராகத் தான் நேரடியாகப் பிரசாரம் செய்து அவர்களின் அரசியல் தோல்வியை உறுதிப்படுத்துவேன் எனவும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
“இனி ஒருபோதும் மோசடியான தேர்தல்கள் இடம்பெறக் கூடாது” என்பதே தனது நோக்கம் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தாலும், ஜனநாயகக் கட்சியினர் இந்தச் சட்டமூலத்தை வாக்காளர் ஒடுக்குமுறை (Voter Suppression) என விமர்சித்து வருகின்றனர். செனட் சபையில் தற்போது நிலவும் 51-48 என்ற இழுபறி நிலையில், இந்தச் சட்டமூலம் நிறைவேறுவது பெரும் சவாலாகவே பார்க்கப்படுகிறது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் லிசா முர்கோவ்ஸ்கி உள்ளிட்ட சிலர் இதற்கு எதிராக வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.