அமெரிக்காவின் குடியரசுக் கட்சி (GOP) உறுப்பினர்களின் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது உரையாடல் மற்றும் வர்த்தகப் போர் குறித்துப் பல்வேறு வியக்கத்தக்க தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவிடம் இருந்து இந்தியா கொள்வனவு செய்யவிருக்கும் அபாச்சி (Apache) ரக உலங்கு வானூர்திகள் தொடர்பான விவகாரத்தை ட்ரம்ப் இதன்போது சுட்டிக்காட்டினார்:
இந்தியா 68 அபாச்சி ஹெலிகாப்டர்களுக்கு முன்பதிவு செய்திருந்த போதிலும், கடந்த 5 ஆண்டுகளாக அவை விநியோகிக்கப்படாமல் தாமதமாகி வருவதாகத் தெரிவித்தார்.
“பிரதமர் மோடி என்னிடம் வந்து, ‘ஐயா (Sir), உங்களைச் சந்திக்கலாமா?’ என்று மிகவும் மரியாதையாகக் கேட்டு, இந்தத் தாமதம் குறித்துப் பேசினார்” என ட்ரம்ப் குறிப்பிட்டார்.
அமெரிக்க இராணுவத் தளவாட உற்பத்தியை விரைவுபடுத்துமாறு உற்பத்தி நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகவும், இனி விநியோக நடைமுறைகள் மாற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
பிரதமர் மோடியுடன் தமக்கு நல்ல நட்பு இருப்பதை ஏற்றுக் கொண்டாலும், வர்த்தக ரீதியாக இந்தியா மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்தார்:
யுக்ரைன் போரின் போது ரஷ்யாவிடமிருந்து இந்தியா பெருமளவில் மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதை அமெரிக்கா எதிர்க்கிறது. இது ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு உதவுவதாக அமெரிக்கா கருதுகிறது.
இதன் காரணமாக இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்துள்ளது.”மோடி ஒரு நல்ல மனிதர், ஆனால் இந்தியா ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால், இந்த வரியை மேலும் அதிகரிக்கப் போவதாக” ட்ரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
இந்த வரி உயர்வு இந்திய ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்தியா ஏற்கனவே ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவைச் சற்று குறைத்துள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டாலும், அமெரிக்காவின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகவே உள்ளது.

