ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஏப்ரல் 01, 2026) புதன்கிழமை தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஈரானின் புதிய அதிபர் தனது முன்னோடிகளை விடக் குறைவான தீவிரப்போக்கு உடையவர் என்றும், மிகவும் புத்திசாலி என்றும் வர்ணித்துள்ள டிரம்ப், அவர் தற்போது போர் நிறுத்தத்தைக் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா காமேனி தலைமையிலான புதிய நிர்வாகம் பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்த போர் நிறுத்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு டிரம்ப் கடுமையான நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார். உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) எப்போது எவ்வித தடையுமின்றி, பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்கப்படுகிறதோ, அப்போது மட்டுமே போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா பரிசீலிக்கும் என அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மார்ச் தொடக்கத்தில் ஈரான் இந்த ஜலசந்தியை மூடியதைத் தொடர்ந்து உலகளவில் எரிபொருள் விலைகள் அதிரடியாக உயர்ந்துள்ளன.
“ஹோர்முஸ் ஜலசந்தி முழுமையாகத் திறக்கப்படும் வரை, நாங்கள் ஈரானை முற்றிலுமாக அழித்து வருவோம்; அல்லது அவர்கள் கூறுவது போல் அவர்களைக் கற்காலத்திற்குத் திருப்பி அனுப்பிவிடுவோம்” என டிரம்ப் தனது பதிவில் எச்சரித்துள்ளார். ஈரானின் இராணுவ மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த ஒரு மாதமாகத் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த மோதல் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அல்லது அதற்கு முன்னதாகவே முடிவுக்கு வரக்கூடும் என டிரம்ப் முன்னதாக ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
அதிபர் டிரம்பின் இந்தத் தகவலை ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார். இது ‘அடிப்படையற்ற மற்றும் பொய்யான தகவல்’ எனத் தெரிவித்துள்ள ஈரான், தற்காப்பு நடவடிக்கைகளில் தாங்கள் எவ்வித காலக்கெடுவையும் பின்பற்றவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது. எது எவ்வாறாயினும், இன்று இரவு 9 மணிக்கு (இலங்கை நேரப்படி நாளை அதிகாலை) வெள்ளை மாளிகையில் இருந்து அதிபர் டிரம்ப் தேசத்திற்கு ஆற்றவுள்ள உரையில், ஈரான் விவகாரம் மற்றும் போர் நிறுத்தம் குறித்த மேலதிக அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

