மன்னாாரில் தைப்பொங்கல் சோகம்: கடலில் நீராடச் சென்ற இருவர் உயிரிழப்பு – ஒருவர் காணாமல் மாயம்!

drowning

மன்னார், பேசாலை கடற்பரப்பில் நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாகக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிய பின்னர், இன்று (15) பிற்பகல் நான்கு நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து பேசாலை கடலில் நீராடுவதற்காகச் சென்றுள்ளனர். கடலில் நீராடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நீரோட்டத்தில் நால்வரும் சிக்கியுள்ளனர்.

நீரில் மூழ்கிய நிலையில் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மற்றுமொரு இளைஞர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ள நிலையில், கடற்படையினரும் காவல்துறையினரும் அவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நால்வரில் ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு, தற்போது மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தைப்பொங்கல் மற்றும் விடுமுறை தினங்களில் கடற்கரைகளுக்குச் செல்வோர் கடலின் சீற்றம் குறித்து அவதானமாக இருக்குமாறும், பாதுகாப்பற்ற இடங்களில் நீராடுவதைத் தவிர்க்குமாறும் காவல்துறையினர் மற்றும் கடற்படையினர் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றனர்.

 

 

 

Exit mobile version