மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பதற்றம்: இளைஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் – இருவர் படுகாயம்!

1532860700 Two police officers arrested over assaulting two youths B

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி காவல் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதோடு, அப்பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று (14) இரவு 10 மணியளவில் குருக்கள்மடம் முருகன் ஆலய வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரதான வீதியில் வீதிச்சோதனை நடந்துகொண்டிருந்த வேளை, உள்வீதியில் நின்ற போக்குவரத்து காவல்துறையினர் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்களை நிறுத்த முற்பட்டுள்ளனர். இதன்போது காவல்துறையினர் இளைஞர்களைத் தலைக்கவசத்தினால் (Helmet) தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்த பின்னரும் இளைஞர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த இரு இளைஞர்களும் உடனடியாக செட்டிபாளையம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பெருமளவிலான இளைஞர்கள் திரண்டனர். பின்னர் மேலதிக காவல்துறையினர் அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்ட நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

“மோட்டார் சைக்கிளை நிறுத்தப் பல வழிகள் இருந்தும், விழுந்த பின்னரும் மனிதாபிமானமின்றித் தாக்கியது காவல்துறையினரின் அராஜகச் செயலாகும்” என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர்.
ரோச் லைட் (Torch Light) அடித்து மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டபோது, அதனை மீறிச் சென்றவர்களைத் தடுக்க முற்பட்ட போதே இந்த நிலைமை ஏற்பட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞர்களினால் களுவாஞ்சிகுடி காவல் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் குறித்த மோட்டார் சைக்கிளைக் கைப்பற்றிச் சென்றுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

 

Exit mobile version