தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் “இனவாதமற்ற, மதவாதமற்ற நாடு” என்ற கோஷம் ஒரு போலிப் பிரச்சாரம் எனத் தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) குற்றம் சுமத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ், இலங்கையின் 78-வது சுதந்திர தினத்தை ‘கறுப்பு நாளாக’ (கரி நாள்) அனுஷ்டிக்கும் போராட்டங்களுக்கு ரெலோ கட்சி முழுமையான ஆதரவை வழங்குகிறது.
இலங்கை சுதந்திரமடைந்து பல தசாப்தங்கள் கடந்தாலும், தமிழ் மக்களுக்குச் சுதந்திரம் என்பது பேச்சளவில் மட்டுமே உள்ளது. சிங்கள மக்களுக்கே அந்தச் சுதந்திரம் கிடைத்துள்ளது. ஈழத் தமிழர்கள் இன்றும் அடக்குமுறைக்குள்ளேயே வாழ்கின்றனர் என அவர் தெரிவித்தார்.
இனவாதம், மதவாதத்திற்கு இடமில்லை என அரசாங்கம் கூறிக்கொண்டாலும், தமிழ் மக்கள் இன்னும் உண்மையான சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கவில்லை என்பதை உலகிற்கு உணர்த்தவே இந்த எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.