ரூ. 50,000 இலஞ்சம் கோரிய தொழில்நுட்ப உத்தியோகத்தர் வத்தளையில் கைது!

image d612aa9798

வத்தளை பிரதேச சபையின் வெலிசர உப அலுவலகத்தில் கடமையாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர், 50,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டாளர் ஒருவர் தனது கட்டட வரைபடத்திற்கு (Building Plan) அனுமதி பெறுவதற்காகச் சமர்ப்பித்திருந்தார். அதில் உள்ள குறைபாடுகளைப் புறக்கணித்து, வரைபடத்திற்கு அனுமதி பெற்றுக்கொடுப்பதாகக் கூறி குறித்த உத்தியோகத்தர் 50,000 ரூபாயை இலஞ்சமாகக் கோரியுள்ளார்.

இது தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, நேற்று (07) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கையும் மெய்யுமாகப் பிடிபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அரச அலுவலகங்களில் இடம்பெறும் ஊழல்கள் மற்றும் இலஞ்ச விவகாரங்கள் குறித்துப் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், இவ்வாறான சம்பவங்கள் குறித்து உடனடியாக முறையிடுமாறும் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

Exit mobile version