ஜனவரி 5-க்குள் தீர்வு வேண்டும்; இல்லையேல் போராட்டம் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கடும் எச்சரிக்கை!

1528176000 protesst l

பாடசாலை நேரத்தை மாற்றுவது தொடர்பாக அரசாங்கம் உரிய பதிலளிக்கத் தவறினால், ஜனவரி மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

கல்விச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக பாடசாலை நேரத்தை மாற்றுவது தொடர்பாக, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (22) முற்பகல் கல்வி அமைச்சில் நடைபெற்றது.

பாடசாலை நேரத்தை நீடிப்பது அல்லது மாற்றுவது தொடர்பான நடைமுறைச் சிக்கல்கள் குறித்து தொழிற்சங்கங்கள் பிரதமரிடம் விளக்கமளித்தன. தொழிற்சங்கங்களின் கருத்துக்களுக்குப் பிரதமர் ஓரளவிற்குச் செவிசாய்த்ததுடன், இது குறித்துப் பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 12 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய தொழிற்சங்கங்கள், தற்போது ஜனவரி 5 ஆம் திகதி வரை காலக்கெடு விதித்துள்ளன.

அரசாங்கம் முன்மொழிந்துள்ள கல்விச் சீர்திருத்தங்களில் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் நலன்கள் கருத்திற்கொள்ளப்பட வேண்டும் எனவும், தன்னிச்சையான முடிவுகளை ஏற்கப்போவதில்லை எனவும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

 

Exit mobile version