பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு: சட்டத்தரணிகளுடன் ஆலோசிக்க உயர்நீதிமன்றம் அனுமதி!

17 5

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைச் சம்பவம் தொடர்பில் 2016ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டமைக்கு எதிராக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் (சிவநேசதுரை சந்திரகாந்தன்) தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு, உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதியரசர்கள் ஜனக் டி சில்வா, மேனகா விஜேசுந்தர மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில் இந்த மனு அழைக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, தனது கட்சிக்காரர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் இருந்து ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இருப்பினும், தற்போது வேறொரு விவகாரம் தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் அவர் இருப்பதால், இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் அவரிடமிருந்து மேலதிக ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என நீதிமன்றிற்குத் தெரிவித்தார்.

இதனைக் கவனத்தில் கொண்ட நீதியரசர்கள் குழாம், சட்டமா அதிபர் தரப்பிடம் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானைச் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளச் சட்டத்தரணிகளுக்கு வாய்ப்பளிப்பது குறித்து வினவியது. இதற்குப் பதிலளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுதர்சன டி சில்வா, மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் உரிய கோரிக்கையை முன்வைக்கும் பட்சத்தில், தடுப்புக் காவலிலுள்ள பிள்ளையானைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதற்குத் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, தனது கட்சிக்காரரிடமிருந்து தேவையான ஆலோசனைகளைப் பெற்று மனுவைத் தொடர்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மனுதாரர் தரப்புச் சட்டத்தரணிகளுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இவ்விவகாரம் தொடர்பிலான விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போதைய தடுப்புக் காவல் சூழலில், பிள்ளையானின் சட்டக் குழுவினர் அவரைச் சந்திப்பது இந்த மனுவின் அடுத்தகட்ட நகர்வுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

 

 

Exit mobile version