திருகோணமலையில் எழுந்துள்ள புத்தர் சிலை விவகாரத்தை ‘தேசியப் பிரச்சினை’ என்று வர்ணித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாசவின் நிலைப்பாட்டை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் கடுமையாக விமர்சித்துள்ளார். சஜீத் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கத் தமிழ்த் தலைவர்கள் முயற்சித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று (நவம்பர் 25, 2025) இது குறித்துக் கருத்துத் தெரிவித்த எஸ். சிறீதரன் பின்வருமாறு கூறினார்:
“திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை தேசியப் பிரச்சினை என்று சொன்ன சஜீத் பிரேமதாசவை, எங்களில் சிலர் ஜனாதிபதியாக்க மூன்று காலில் நின்றார்கள். சஜீத் பிரேமதாசவின் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பதும் உண்மை முகமும் தற்போது வெளிவந்துள்ளது.”
“சஜீத் மட்டுமல்ல, அவருக்குப் பின்னால் வால் பிடித்தவர்களும் தமிழ் மக்களிடத்தில் மன்னிப்புக் கோர வேண்டும். இதுதான் வரலாறு.”
புத்தர் சிலையை நிறுவியதன் பின்னணி மற்றும் அதன் நோக்கம் குறித்துப் பேசுகையில்:
“முன்னதாக விகாரையைச் சேர்ந்தவர்கள் ஹோட்டல் அமைக்கவும், அதில் வருமானமீட்டவும் பிக்குகளும் அவர்களுடன் இணைந்த அணியினரும் நினைத்திருப்பார்கள். சட்ட நடவடிக்கை வந்ததும் உணர்வுகளைத் தூண்ட வேண்டியது புத்தர் சிலை தானே.”
“சட்டத்துக்கு முரணாக மாநகர சபையின் சட்டங்களை மீறி பலாத்காரமாக மீறி எதைச் செய்தாலும் அதனைத் தடுக்க வேண்டும். சட்டத்தை முதலில் மதிக்க வேண்டும். பிக்குகளாக இருந்தாலும், சிங்கள மக்களாக இருந்தாலும் சட்டத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதுதான் மிக முக்கியம்.”
“இது ஒரு ஆக்கிரமிப்பு என்பதை வெளியில் குரல் கொடுத்தவர்கள் சம்பவ இடத்தில் குரல் கொடுத்தவற்றை வைத்துப் பார்க்கின்றபோது புரிகிறது. இப்படிச் சொல்லிய சொல்லியே ஒவ்வொரு இடத்திலும் புத்தர் சிலையை வைத்து புத்தர் அடையாளம் என்று கூறி, பிறகு அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது என்று கூறுவார்கள்” என்றார்.

