திருச்சி சிறப்பு முகாம்: விடுதலை செய் அல்லது நாடு கடத்து – இலங்கை இளைஞரின் தொடர் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்!

9f9401ee34854fe8b9424a9905db62531679431836355184 original

இந்தியாவின் திருச்சி சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் (Special Camp) தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் ஒருவர், தன்னை விடுவிக்கக் கோரித் தொடர்ந்து உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனை இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

உரிய கடவுச்சீட்டு இன்றி தமிழகத்தில் தங்கியிருந்த குற்றச்சாட்டில், கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் திகதி குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டார். முகாமிலிருந்து தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து அவர் கடந்த சில நாட்களாக உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.

திருச்சி சிறை அதிகாரிகள் மற்றும் சிறப்பு முகாம் அதிகாரிகள் அந்த இளைஞருடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எனினும், அவர் எந்தவித நிபந்தனைகளுக்கும் இணங்க மறுத்து தனது போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.

முன்னதாக இவருடன் மேலும் நான்கு பேர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை நாமக்கல் மறுவாழ்வு மையத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

குறித்த இளைஞனுக்குத் தனது தாயகம் (இலங்கை) திரும்ப விருப்பம் இல்லை என்பதால், அவரை நாமக்கல் மையத்திற்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தீர்மானத்தையும் நிராகரித்துள்ள அவர், தன்னை முழுமையாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னைக்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகரகம் மற்றும் இந்தியத் தரப்புடன் இலங்கை வெளிவிவகார அமைச்சு தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதாகவும், இளைஞரின் உடல்நிலை மற்றும் சட்ட ரீதியான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version