சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் மூன்று இலங்கைச் சிறுத்தைக்குட்டிகள்: 30 ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்த அரிய நிகழ்வு!

world 192

சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் கடந்த ஜனவரி 1-ஆம் திகதி பிறந்த மூன்று இலங்கைச் சிறுத்தைக்குட்டிகள் (Sri Lankan Leopard Cubs), இன்று (ஏப்ரல் 16) உத்தியோகபூர்வமாகப் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் இலங்கைச் சிறுத்தை இனம் வெற்றிகரமாகப் பிரசவிப்பது இது மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு நிகழும் முதல் மைல்கல்லாகும்.

தாய் யாலா (Yala) மற்றும் தந்தை அசங்கா (Asanga) ஆகியவற்றுக்குப் பிறந்த இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குட்டிகளே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கடைசியாக 30 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் நைட் சஃபாரியில் இந்த இனத்தைச் சேர்ந்த குட்டி ஒன்று பிறந்திருந்தது. அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் (IUCN Red List) இடம்பெற்றுள்ள இலங்கைச் சிறுத்தைகள், தற்போது காடுகளில் 800-க்கும் குறைவாகவே எஞ்சியுள்ள நிலையில், இந்தப் பிறப்பு சர்வதேச முக்கியத்துவம் பெறுகிறது.

“இந்த மூன்று குட்டிகளும் ஆரோக்கியமாக வளர்ந்து வருவது மிகுந்த மனநிறைவைத் தருகிறது” என மண்டாய் வனவிலங்கு குழுமத்தின் காப்பாளர் ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார். இரண்டு ஆண் குட்டிகளும் மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவையாகவும், பெண் குட்டி மிகவும் துடிப்பானதாகவும் காணப்படுகின்றன. அவற்றின் நெற்றியில் உள்ள புள்ளிகளின் வடிவங்களைக் கொண்டே தனித்தனியாக அடையாளம் காண முடிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மண்டாய் வனவிலங்கு குழுமத்தின் ‘வைல்ட் ஆப்பிரிக்கா’ (Wild Africa) கண்காட்சியில் இந்தக் குட்டிகளைக் காணலாம். எதிர்வரும் மே மாத நடுப்பகுதி வரை தினமும் தாயுடன் குட்டிகளைக் காணலாம். அதன் பின்னர், வாரத்தின் புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் இவை காட்சிப்படுத்தப்படும். பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் குட்டிகள் ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவற்றுக்கான தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன.

மண்டாய் வனவிலங்கு சரணாலயம் 2026-ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் பல அரிய உயிரினங்களின் பிறப்பை வரவேற்றுள்ளது. மார்ச் மாதத்தில் போர்னியன் ஓராங்குட்டான் மற்றும் எறும்புத்தின்னி குட்டிகள் பிறந்தன. 2025-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 1,000 புதிய குட்டிகளின் பிறப்பை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், இந்த இலங்கைச் சிறுத்தைக்குட்டிகளின் வருகை பூங்காவிற்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

Exit mobile version