கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

Untitled 89

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல் 6, 2026) முதல் ‘பூச்சிய வர்த்தக தள்ளுபடி வீதம்’ (Zero MDR) வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை நடைபெறவுள்ள விசேட நிகழ்வின் போது ஜனாதிபதியினால் இந்தத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. காசுப் பயன்பாட்டைக் குறைத்து, நடுத்தர மற்றும் சிறு வர்த்தகர்களை டிஜிட்டல் மயமாக்கலுக்குள் கொண்டு வருவதே இதன் பிரதான நோக்கமாகும்.

புதிய நடைமுறையின்படி, 5,000 ரூபாவிற்கும் குறைவான பெறுமதியுடைய கியூ.ஆர். பணப்பரிமாற்றங்களின் போது, பணம் அனுப்புபவர் அல்லது பெறுபவர் என இருவரிடமிருந்தும் எவ்வித மேலதிக சேவைக் கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது. இதற்கான செலவினங்களை அரச மற்றும் தனியார் வங்கிகள் முழுமையாகப் பொறுப்பேற்க இணங்கியுள்ளன. இதன் மூலம், தேனீர் கடைகள் முதல் சிறிய சில்லறை விற்பனை நிலையங்கள் வரை அனைத்து வர்த்தகர்களும் எவ்வித தயக்கமுமின்றி டிஜிட்டல் முறையில் பணத்தைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் 20-க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட மொபைல் செயலிகள் லங்கா கியூ.ஆர் வசதியை வழங்குகின்றன. இருப்பினும், அதன் பயன்பாடு இன்னும் குறைவாகவே உள்ளது. 2025-ஆம் ஆண்டின் இறுதி காலாண்டு தரவுகளின்படி, மாதமொன்றுக்குச் சராசரியாக 90,000 கொடுக்கல் வாங்கல்களே கியூ.ஆர். மூலம் நடைபெறுகின்றன. இந்த எண்ணிக்கையைப் பல மடங்கு அதிகரிக்கவும், பணப்பரிமாற்றங்களை எளிதாக்கவும் இந்தப் புதிய ‘பூச்சியக் கட்டண’ வசதி உதவும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.

இந்த வசதியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்களை ஊக்கப்படுத்தும் வகையில் விசேட பரிசுச் சீட்டிழுப்புத் திட்டங்கள் மற்றும் பல்வேறு சலுகைகளையும் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, 5,000 ரூபாவிற்கும் குறைவான பரிமாற்றங்களே தற்போதைய சந்தையில் அதிகளவில் நடைபெறுவதால், இந்தத் திட்டம் சாமானிய மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் நிதிநுட்ப நிறுவனங்களுடன் இணைந்து டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் இந்த முயற்சி, இலங்கையின் பொருளாதாரத்தை நவீனமயமாக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Exit mobile version