தென் கடலில் பெரும் போதைப்பொருள் வேட்டை: 250 கிலோ கொக்கைனுடன் 6 பேர் கைது!

23 10

இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், தென் கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சுமார் 250 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. IMULA – A- 1108GLE என்ற இலக்கத்தைக் கொண்ட ‘பிரியங்கா – 6’ எனும் பலநாள் மீன்பிடிப் படகின் மூலம் இந்தப் போதைப்பொருள் நாட்டிற்குக் கடத்தி வரப்பட்டுள்ளது.

கடற்படையினர் மேற்கொண்ட இந்தத் துரித நடவடிக்கையின் போது, குறித்த படகிலிருந்த ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காகத் திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கடல் மார்க்கமாக முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதற்காக, முப்படைகளும் இணைந்து அண்மைக்காலமாகப் பலமான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. அதன் ஒரு அங்கமாகவே இந்தப் பாரிய போதைப்பொருள் மீட்புச் சம்பவம் பார்க்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட கொக்கைனின் சர்வதேச சந்தை மதிப்பு பல கோடிக்கணக்கான ரூபாய்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் நீண்டகாலமாகப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர்களா அல்லது சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் இவர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்துப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Exit mobile version