மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் நெருக்கடி, காகித வர்த்தகத்தைத் தாண்டி நேரடி விநியோகச் சந்தையில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் உச்சகட்டமாக, இலங்கைக்கு விநியோகிக்கப்படும் ஒரு பேரல் எண்ணெயின் “வீட்டிற்கே வந்து சேர்க்கும்” (Landed Cost) விலை வரலாற்றில் இல்லாத அளவாக 286 டாலர்களை எட்டியுள்ளதாக HSBC வங்கியின் தலைமை நிர்வாகி ஜார்ஜ் எல்ஹெடெரி (George Elhedery) தெரிவித்துள்ளார்.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 90 முதல் 110 டாலர்களுக்குள் வர்த்தகமானாலும், இலங்கையைப் போன்ற நாடுகளுக்கு வந்து சேரும்போது அதன் விலை மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. இதற்கு கப்பல் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு, காப்பீட்டுத் தொகை உயர்வு மற்றும் போர்க்கால இடர்பாடுகள் ஆகியவையே முக்கிய காரணங்களாகும். செங்கடல் வழியாக எண்ணெயைக் கொண்டு வர 30 முதல் 40 டாலர்கள் வரை மேலதிகமாகச் செலவிட வேண்டியுள்ளதாக எல்ஹெடெரி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆசியாவின் எண்ணெய் நுகர்வு 80 சதவீதம் வளைகுடா நாடுகளையே சார்ந்துள்ள நிலையில், தற்போது நிலவும் விநியோகத் தட்டுப்பாடு காரணமாக ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகள் எஞ்சியுள்ள கச்சா எண்ணெயைப் பெறுவதில் தீவிரமாகப் போட்டியிடுகின்றன. ஜேபி மார்கன் (J.P. Morgan) நிறுவனத்தின் ஆய்வின்படி, உலகளாவிய விநியோகத்தில் ஒரு நாளைக்குச் சுமார் 13 மில்லியன் பீப்பாய்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இந்தத் தட்டுப்பாடு காரணமாக, உடனடி விநியோகத்திற்கான கச்சா எண்ணெய் விலை (Dated Brent) சாதனை அளவாக 144 டாலர்களைத் தாண்டியுள்ளது.
ஒரு பேரல் எண்ணெய் 286 டாலர் என்ற விலையில் இறக்குமதி செய்யப்படுவது, இலங்கையைப் போன்ற ஒரு வளரும் நாட்டின் பொருளாதாரத்தால் நீடித்த நிலையில் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு சுமையாகும். உலகச் சந்தை விலைகளுக்கும் உண்மையான விநியோக விலைகளுக்கும் இடையே உள்ள இந்த மிகப்பெரிய இடைவெளி, இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு மற்றும் உள்நாட்டு எரிபொருள் விலைகளில் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஹோர்முஸ் ஜலசந்தி விரைவில் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவினாலும், தற்போதைய நிலவரம் இலங்கைக்குப் பெரும் சவாலாகவே உள்ளது.

