நிதி மோசடியில் ஈடுபட்ட 125 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!

Untitled 32

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி நிதி மோசடிகளில் (Online Scams) ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 125 சீனப் பிரஜைகள், விசேட விமானம் மூலம் நேற்று இரவு தங்களின் சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டனர். அநுராதபுரம் பகுதியில் தங்கியிருந்த போது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டு, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 17-ஆம் திகதி அநுராதபுரம் நகரில் உள்ள பல விடுதிகளில் தங்கியிருந்த இவர்கள், அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக விசாரணைகளில் தெரியவந்தது. இவர்கள் சுற்றுலா மற்றும் வர்த்தக விசாக்களின் கீழ் இலங்கைக்கு வருகை தந்துவிட்டு, விசா காலம் முடிந்த பின்னரும் குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறி சட்டவிரோதமாகத் தங்கியிருந்து இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சீன அரசாங்கத்துடன் இலங்கை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்ட உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இவர்களை அழைத்துச் செல்வதற்காகச் சீனாவிலிருந்து விசேட விமானம் ஒன்று நேற்று முன்தினம் இலங்கைக்கு வந்தடைந்தது. அதன்படி, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் இவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.

இந்த நாடு கடத்தல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தைச் சேர்ந்த 6 அதிகாரிகள் கொண்ட குழுவொன்றும் இவர்களுடன் சீனா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளது. அண்மைக் காலமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்து முன்னெடுக்கும் இவ்வாறான சைபர் குற்றங்களைத் தடுப்பதற்குப் பாதுகாப்புத் தரப்பினர் விசேட தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version