இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் (@virat.kohli) இன்று (30) அதிகாலை திடீரென மறைந்ததால், உலகம் முழுவதுமுள்ள மில்லியன் கணக்கான ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இன்று அதிகாலை சுமார் 274 மில்லியன் ரசிகர்களைக் கொண்ட கோலியின் பக்கம் திடீரெனச் செயலிழக்கப்பட்டது. தேடல் முடிவுகளில் அவரது கணக்கு காட்டப்படாததுடன், “இந்த பக்கம் கிடைக்கவில்லை” (This page isn’t available) என்ற செய்தியே வந்தது.
விராட் கோலி ஓய்வு பெறப்போகிறாரா அல்லது அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டதா எனப் பலரும் எக்ஸ் (X) தளத்தில் விவாதங்களைத் தொடங்கினர். சிலர் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவின் பக்கத்திற்குச் சென்று, அண்ணனின் கணக்கு எங்கே? என நகைச்சுவையாகவும் கவலையுடனும் வினவினர்.
பல மணி நேரக் குழப்பங்களுக்குப் பிறகு, இன்று காலை 8:30 மணியளவில் விராட் கோலியின் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.
விராட் கோலி அல்லது மெட்டா (Meta) நிறுவனம் இது குறித்து அதிகாரபூர்வமாக இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.
தொழில்நுட்பக் கோளாறு: இது திட்டமிட்ட வெளியேற்றம் அல்ல என்றும், இன்ஸ்டாகிராம் தளத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு (Technical Glitch) காரணமாகவே இவ்வாறு நடந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
சகோதரரின் கணக்கு: ஆச்சரியப்படும் விதமாக, கோலியின் சகோதரர் விகாஸ் கோலியின் கணக்கும் இதே நேரத்தில் முடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது கோலியின் அனைத்துப் பதிவுகளும், பின்தொடர்பவர்களும் எவ்வித பாதிப்புமின்றி மீட்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.